×

சேலம் வடக்கு, தெற்கு தொகுதியில் அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு

சேலம், ஏப்.9: சேலம் வடக்கு, தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சேலம் நாடாளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நேற்று சேலம் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் பரிசு பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். கன்னங்குறிச்சி, தாதம்பட்டி, மன்னார்பாளையம் பிரிவு, புத்துமாரியம்மன் கோயில், வடக்கு ரயில்வே பகுதிகள், அணைரோடு, பொன்னம்மாப்பேட்டை, வெங்கட்ராமன்பிள்ளை, நஞ்சம்பட்டி, கிருஷ்ணன்புதூர், கோட்டை, அண்ணாநகர், நாவலர் நெடுஞ்செழியன் சாலை, பால்மார்க்கெட் உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது வேட்பாளர் எஸ்.கே.செல்வம் கூறியதாவது: தமிழகத்தில் துரோக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி வரியை விதித்த பிரதமர் மோடியின் கைபாவையாக இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தேர்தலில் வாக்காளர்களாகிய நீங்கள் நல்ல பாடம் புகட்டவேண்டும். தங்களது நியாயமான கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை பழிவாங்கிய இபிஎஸ்., ஓ.பி.எஸ்சுக்கு தக்க பதிலடியை வாக்காளர்கள் கொடுக்க வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். சேலம் மாநகரில் உள்ள நெசவாளர்களின் பிரச்னை போக்க நடவடிக்கை எடுப்பேன். 2 நாட்களுக்கு ஒரு முறை குடிதண்ணீர் வழங்குவேன். எந்நேரமும் என்னை அழைத்து உங்கள் பிரச்னைகளை தெரிவிக்கலாம். உடனடியாக அதனை தீர்த்து வைப்பேன். இவ்வாறு அவர் பேசினார். அவருடன் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், பகுதி செயலாளர் தம்பி ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags : S.M. ,Selvam ,South ,Samaj North ,
× RELATED மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில்...