×

ராமநாதபுரம் தொகுதியின் முடிவை மாற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள்

கீழக்கரை, ஏப்.9: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 31.1.2019 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி மொத்தம் 15,52,761 வாக்காளர்கள் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை, பரமக்குடி(தனி), 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 11,22,589 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இது தவிர புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஆகிய சட்ட பேரவையும் இடம் பெற்றுள்ளது.நீண்ட கடற்கரையை கொண்ட ராமநாதபுரம் தொகுதியில் பெரும் தொழிற்சாலைகள் இல்லை. மீன்பிடி தொழிலும் நசிந்து வருகிறது. விவாசாயம் பெருமளவில் கைகொடுக்காததால் பல ஆண்டுகளுக்கு முன்பு இத்தொகுதியை சேர்ந்த லட்சத்திற்கும் மேற்பட்டோர் வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தொழில் நிமித்தமாகவும், பணியாற்றவும் சென்று விட்டனர்.

இதில் அலுவலகம் மற்றும் வீட்டு வசதி மேலாண்மை துறைக்கும், கட்டுமான துறைக்கும் அதிகளவில் தொழிலாளர்கள் பணிக்கு சென்றுள்ளனர். தற்போது கட்டுமான பணிக்கு ஆட்கள் செல்வது குறைந்து விட்டாலும், ஏற்கனவே சென்றவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வருகிறனர். இவர்களில் அதிகப்படியானோர் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிகு உட்பட்டோர் ஆவார்கள்.வெளிநாட்டில் பணியாற்றும் ராமநாதபும் மக்களவையை சேர்ந்தோர் ராமநாதபுரம் தொகுதியில் மொத்த வாக்காளர்களில் 3 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பார்கள். இவர்கள் யாரேனும் ஒரு வேட்பாளருக்கு வாக்களித்தால் இத்தொகுதியின் தேர்தல் முடிவே மாறி விடும்.

எனவே இப்பகுதியை சேர்ந்த கட்சியினர் இங்கிருந்து வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு யாரெல்லாம் வெளிநாடுகளில் சில மாதங்களில் விடுமுறைக்கு வர வாய்ப்புள்ளவர்களோ அவர்களை முன்னரே வாக்களிக்க ஏதுவாக விடுமுறைக்கு வந்து விடுமாறு வேண்டுகோள் விடுகின்றனர். சிலர் ஒரு படி மேலே சென்று விமான டிக்கெட் தொகையில் குறிப்பிட்ட தொகையை தருவதாகவும் அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டுகின்றனர். அப்படி அவர்கள் வருவதின் மூலம் அவரின் குடும்பத்தின் மொத்த ஓட்டையும் அள்ளலாம் என்று திட்டமிடுகின்றனர். அப்படி வர முடியாதவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குடும்பத்தினரை தங்கள் கட்சியினருக்கு வாக்களிக்க சொல்ல வேண்டுகின்றனர். இதன் மூலம் இத்தொகுதியில் சில ஆயிரம் வாக்குகளை பெறலாம் கட்சியினர் திட்டமிட்டு காய் நகர்த்துகின்றனர். பதவியை பெற தேர்தல் ஒரு விதம் என்றால் வாக்குகளை பெற பல விதங்களை கையாள்கின்றனர் அரசியல் கட்சியினர்.

Tags : Tamils ,Ramanathapuram ,
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்