பரமக்குடி, ஏப்.9: பரமக்குடியில் அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகரை ஆதரித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். அப்போது கட்சிக்கு துரோகம் செய்து தனிக்கட்சி தொடங்கியவர்கள் உருப்பட முடியாது என்று கூறினார். பரமக்குடியில் அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகர் நேற்று காலை மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் நகர் நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் பேருந்து நிலையத்தில் சதன்பிரபாகரை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். அப்போது மத்திய அரசின் மூலம் 200 ஏக்கர் செலவில் உலகதரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நெசவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரிபேட் தொகை விரைவில் வழங்கப்படும். 174 கோடி பயிர்காப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 129 கிராமங்களுக்கு வழங்கவேண்டிய பயிர்காப்பீட்டு தொகை இந்த வாரத்திற்குள் வழங்கப்படும். கட்சிக்கு துரோகம் செய்தவர்கள், ஊழல் பெருச்சாளிகள் அதிமுக.விலிருந்து தனியாக சென்று கட்சி தொடங்கியவர்கள் உருப்பட முடியுமா. இவர்கள் எப்படி மக்களை காப்பாற்றுவார்கள் என்றார். பிரசாரத்தில் மாநில மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, நகர் செயலாளர் கணேசன், முன்னாள் நகர் செயலாளர் ஜமால், முன்னாள் எம்.பி.நிறைகுளத்தான், கூட்டுறவு வங்கி தலைவர் வடிவேல்முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு வினோத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நேற்று மாலை கமுதி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் சதன்பிரபாகர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.