தூத்துக்குடி, ஏப். 9: தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (9ம் தேதி) துவங்குகிறது. வரும் 18ம்தேதி தேரோட்டம் நடக்கிறது. தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் எனப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான திருவிழா இன்று (9ம் தேதி) துவங்கி வரும் 18ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று காலை கொடியேற்றம் நடக்கிறது. இதையொட்டி காலை 7.35 மணிக்கு கொடிப்பட்டம் வீதியுலாவும், 11 மணிக்கு கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. 3ம் திருநாளான வரும் 11ம் தேதி காலை 8.45 மணிக்கு திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் வைபவம் நடக்கிறது. 15ம் தேதி காலை 6.15 முதல் 7.20க்குள் நடராஜ பெருமானுக்கு உருகு சட்டசேவையும், வரும் 18ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 7.45 மணிக்கு அன்னை பாகம்பிரியாள் - சங்கரராமேஸ்வரர், சிறிய தேரில் விநாயகரும், முருகனும் எழுந்தருளியதும் நான்கு ரத வீதிகளிலும் தேரோட்டம் நடைபெறும். இதையொட்டி காலை முதல் மாலை வரை அன்னதானம் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் விழாக்குழுவினர், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.