×

கரூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வாக்கு சேகரிப்பு

கரூர், ஏப். 9: மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரி பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று கரூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்தார். கரூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்திற்கு காவிரிநீர் தரக்கூடாது என கர்நாடகாவில் காங்கிரசார் கூறி வருகின்றனர். இங்கு நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காது. மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தால் தான் காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். கரூரில் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை அமைக்கப்பட்டிருக்கிறது. பசுபதிபாளையத்தில் ரயில்வே பாதையைக் கடப்பதற்காக குகைவழிப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. பொங்கலுக்கு அனைத்து ரேசன்கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 எடப்பாடி அரசு வழங்கியது. ஜெயலலிதா வழியில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

நீட் தேர்வினை அதிமுக ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் இருந்து விலக்கு பெறுவதற்காக தொடர்ந்து போராடி வருகிறோம். காவிரி பிரச்சனைக்காக பாராளுமன்றத்தையே முடக்கினோம். இங்கு நான் போட்டியிடவில்லை. இரட்டை இலை தான் போட்டியிடுகிறது. அதனை மனதில் வைத்து ஆதரவளிக்க வேண்டும் என்றார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா, நெடுஞ்செழியன் மற்றும் அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

Tags : Karumbur ,Thambidurai ,area ,AIADMK ,
× RELATED ஒருபோதும் தேசிய கட்சிகளுக்கு மக்கள்...