அருப்புக்கோட்டை, ஏப். 8: மத்தியில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் ராகுல் பிரதமரானதும், ஜிஎஸ்டியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்கு சேகரிப்பின்போது சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ பேசினார்.விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து, திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ, அருப்புக்கோட்டையில் உள்ள பாவடிதோப்பு, அண்ணா சிலை, நேரு மைதானம் பகுதிகளில் நேற்று முன்தினம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:மத்தியில் ராகுல்காந்தி பிரதமராகவும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராகவும் வரவேண்டும்.
திமுக கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சி மாறும்போது, 60 வயது முதியோர் அனைவருக்கும் பென்ஷன், ஏழை தாய்மார்கள் 5 பவுன் நகை வரை வங்கியில் அடகு வைத்திருந்தால், அந்த கடனை முழுமையாக ரத்து செய்தல் மற்றும் காஸ் சிலிண்டர் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மோடி மீண்டும் பிரதமராக வந்தால், ஜிஎஸ்டியை மேலும் உயர்த்துவார். ஜிஎஸ்டியை குறைக்க ராகுல் பிரதமராக வேண்டும். அருப்புக்கோட்டை வழியாக சென்னைக்கு வாரத்திற்கு மூன்று நாள் மட்டுமே ஓடும் ரயிலை தினசரி இயக்க மாணிக்கம்தாகூர் நடவடிக்கை எடுப்பார். தற்போது அருப்புக்கோட்டை நகராட்சியில் வரி அதிகமாக விதிக்கப்பட்டிருப்பதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என பேசினார்.இந்த பிரசாரத்தின்போது முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவபிரகாசம், முன்னாள் ஒன்றியச் சேர்மன் சுப்பாராஜ், திமுக நகரச்செயலாளர் மணி, மதிமுக நகர செயலாளர் மணிவண்ணன், மாநில நெசவாளர் அணி செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் சோலையப்பன் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.