கோவை, ஏப். 7: கோவை மாவட்டத்தில் ஜி.எஸ்.டி வரியால் நலிவடைந்த சிறு, குறு தொழில்கள் ஊக்குவிக்கப்படும், ஜி.எஸ்.டி வரி குறைக்கப்படும் என அமமுக வேட்பாளர் அப்பாத்துரை கூறினார். கோவை மக்களவை தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அமமுக) வேட்பாளர் அப்பாத்துரை, கடந்த ஒரு காலமாக கோவை தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு, பரிசுப்பெட்டி சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். இவர், நேற்று கோவை வடக்கு, கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளான இடையர்பாளைம், வேலாண்டிபாளையம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பகுதிகள், மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று, பரிசுப்பெட்டி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஜி.எஸ்.டி வரி காரணமாக கோவையில் பல்லாயிரக்கணக்கான சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டன. இந்த தொழில்கள் மீண்டும் ஊக்குவிக்கப்படும். நாங்கள் வெற்றி பெற்றால் ஜி.எஸ்.டி வரி குறைக்கப்படும். இதன்மூலம் தொழில்வளம் மீண்டும் பெருகும். கமிஷன் அடிப்படையில் திட்டங்களை கொண்டு வரும் ஆட்சியாக மத்திய, மாநில அரசுகள் உள்ளன. ஊழல் ஆட்சி, அடிமை ஆட்சி என இரு ஆட்சிகளும் அகற்றப்பட வேண்டும்.
மக்கள் விரும்பும் திட்டத்தை கொண்டு வருவோம். மக்கள் விரும்பாத திட்டத்தை ரத்து செய்வோம். கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும். சமையல் காஸ் விலை குறைக்கப்படும். இவ்வாறு வேட்பாளர் அப்பாத்துரை பேசினார்.பிரசாரத்தில், அமமுக நிர்வாககிகள் உலகநாதன், அம்மா பாலாஜி, ராகேஷ், ஜெயசுதா உள்பட பலர் பங்கேற்றனர்.