தஞ்சை, ஏப்.7: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பழநிமாணிக்கம், தஞ்சை சட்டசபை தொகுதி வேட்பாளர் நீலமேகம் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது: ஜிஎஸ்டியை விட மிகப்பெரிய ஆபத்தாக ஆன்லைன் வரத்தகம், ஊக வணிக முறையை கொண்டு வருவர். இதனால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். மேகதாதுவில் அணைக்கட்டிக்கொள்வதற்கு கர்நாடகத்தில் சதிக்கூட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மேகதாதுவில் அணைக்கட்டிக் கொள்ள கர்நாடகத்துக்கு மத்திய அரசு மறைமுகமாக அனுமதி அளித்தது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு தண்ணீர் வராது. ஒரு சில ஆண்டுகளில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இந்த நிலங்களை பெரு நிறுவனங்கள் வாங்கி பல அடி ஆழத்திற்கு துளைப்போட்டு மீத்தேன், ஷேல் எரிவாயு போன்றவற்றை எடுப்பார்கள்.
இது போல் எடுப்பதால், எத்தியோப்பியாவை போல மாறி சோழநாடு அழிந்துவிடும். இப்படிப்பட்ட ஆபத்து நெருங்கும் வேளையில் அதை தடுத்து நிறுத்தும் சூழ்நிலையில் இங்குள்ள எடப்பாடி அரசு இல்லை. இதற்கு காரணம் அதிமுக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது என்றார். முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, மாவட்ட செயலாளர் துரைசந்திரசேரகன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாநகர மாவட்ட தலைவர் ராஜேந்திரன், இந்திய கம்யூ, மார்க்சிஸ்ட் கம்யூ. மாவட்ட செயலாளர்கள் பாரதி, நீலமேகம், திக தலைவர்அமர்சிங், விசி, மதிமுக மாவட்ட செயலாளர்கள் சொக்காரவி, உதயகுமார், மதிமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் துரைபாலகிருஷ்ணன் மற்றும் பலர் பிரசாரத்தில் பங்கேற்றனர்.