×

உடல்ரீதியாக பாதிப்பு ஜில் நீர் பருக பிரிட்ஜை ஒதுக்கி மண்பானைக்கு மாறிய மக்கள்

புதுக்கோட்டை, ஏப்.7:  புதுக்கோட்டை  மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. உடல்ரீதியாக பாதிப்பு ஏற்படுவதால் பொதுமக்கள் பிரிட்ஜை ஒதுக்கி ஜில் தண்ணீருக்காக இயற்கையான மண்பானையை  பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் புதுகை  மாவட்டத்தில் மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள்  தண்ணீரை பிரிட்ஜில் வைத்து குடித்து வருகின்றனர். இதனால்  உடல் ரீதியாக பிரச்னை வருவதால் தற்போது பல இடங்களில் வீடுகள் மற்றும் அரசு  அலுவலங்களில் மண்பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து வருகின்றனர். மண்பானையில்  வைக்கப்பட்டுள்ள தண்ணீரை குடித்தால் பக்க விளைவுகள் இல்லாமல் வெயிலுக்கு  இதமா இருந்து வருகிறது. மண்பானை பொருட்களை மக்கள் பயன்படுத்த  துவங்கியுள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நம் முன்னோர்கள்  நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் தரக்கூடிய மண்பானை சமையலையே விரும்பி  வந்தனர். உணவில் சுவை கூட்டுவதுடன் நீண்ட நேரத்திற்கு கெடாமல்  வைத்திருந்ததால் மண்பானைகளை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.  மண் பானையில் தயிரை ஊற்றி வைத்தால் புளிக்காமல் இருப்பதோடு  குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருப்பதால் பெரும்பாலான கிராமங்களில்  இன்றும் தயிர், மோரை மண் பானைகளில் ஊற்றி வைக்கின்றனர்.  மண் பானைகளில் ஊற்றி  வைக்கும் தண்ணீரை குடிக்கும்போது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, எந்தவித  பக்கவிளைவும் அண்டாது. இதனால் தற்போது கோடைகாலத்தை சமாளிக்க மண்பானை  விற்கும் இடங்களை பொதுமக்கள் தேடி அலைய துவங்கி விட்டனர்.

புதுக்கோட்டை  மாவட்டத்தில் கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் பலவித  வடிவங்களில் மண்பானைகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். திருகு குழாய்  பொருத்தப்பட்ட மண்பானை, பாட்டில் மற்றும் ஜக்கு மண்பானையிலான பொருட்கள்  விற்பனைக்கு வந்துள்ளன. இதில் மிகவும் சவுகரியாக உள்ள திருகு குழாய்  பொருத்தப்பட்ட மண்பானைகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மண்பானை வியாபாரிகள் கூறியதாவது: புதுக்கோட்டை  மாவட்டத்தில் மண்பானை செய்ய தேவையான மூலப்பொருட்களில் முதன்மையானது மண்.  மண் கிடைப்பதில் பெருத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் மண்ணை தேடி  அலையவேண்டியுள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள்  மண்பானைகளில் தண்ணீர், மோர், தயிர் ஊற்றி வைத்து பருகுவதற்கு ஆர்வம் காட்டி  வருகின்றனர். எங்களிடம் காலத்திற்கேற்ப பல வடிவங்களில் தண்ணீர் ஊற்றி வைக்கும்  மண்பாண்டங்கள் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. வீட்டில் மண்பானை சமையல்  செய்ய விரும்புவர்களுக்கு தனியாக சிறப்பான முறையில் செய்து கொடுக்கிறோம்.  மண்பானை உணவுகளை சாப்பிட்டால் உடல் உறுதியாகவும், ஆரோக்கயமாகவும்  இருக்கும் என்றனர்.

Tags : Jill Water Bridge ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...