×

நாடாளுமன்ற தேர்தலோடு அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் காணாமல் போவார்கள்

தர்மபுரி, ஏப்.5: நாடாளுமன்ற தேர்தலோடு, அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று, பிரசாரத்தின் போது உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில், கோவிந்தசாமி போட்டியிடுகிறார். அவருக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி.அன்பழகன் ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி நேற்று தர்மபுரி ஒன்றியத்திற்குட்பட்ட திப்பிரெட்டி அள்ளி, கொண்டகரஅள்ளி, வே.முத்தம்பட்டி, கோடு அள்ளி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேட்பாளர் கோவிந்தசாமி, திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.  

அவரை ஆதரித்து அமைச்சர் கே.பி அன்பழகன் ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் வாக்கு சேகரித்த போது, அமைச்சர் பேசுகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. ஜெயலலிதாவின் நல்லாசியோடு நடைபெறும் இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அதிமுகவுக்கு துரோகமிழைத்து விட்டு வெளியே சென்றவர்கள், மீண்டும் உங்களை சந்திக்க வருவார்கள். இந்த இடைத்தேர்தல் எதற்காக வந்தது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அதிமுகவிற்கு துரோகம் இழைத்தவர்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு காணாமல் போய்விடுவார்கள் என்றார். இந்த வாக்கு சேகரிப்பின் போது, மொரப்பூர் அதிமுக ஒன்றிய முன்னாள் செயலாளர் மதிவாணன், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட விவசாய அணி செயலாளர் கமலேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,elections ,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...