கூடலூர், ஏப். 5: கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திச்சென்ற வாலிபரை குமுளியில் கேரள போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மூன்றரைகிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்துவது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று மாலை தமிழக எல்லைப்பகுதியான குமுளியில் உள்ள கேரள கலால்துறை சோதனைச்சாவடியில் இன்ஸ்பெக்டர் ஜனீஷ் தலைமையில் கேரள போலீசார், வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழக எல்லைப்பகுதியிலிருந்து கேரள பகுதிக்குள் சென்ற வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மூன்றரை கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த உதயகுமார் மகன் உண்ணிகுட்டன் (21) என்பதும், இவர் கம்பத்தில் வாங்கிய கஞ்சாவை கேரளாவில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்கள் அவரை கைது செய்தனர்.