காரைக்குடி, ஏப்.4: அழகப்பா கல்விக்குழுமம் சார்பில் விரைவில் பிசியோதெரபி மற்றும் நர்சிங் கல்லூரி துவங்கப்பட உள்ளது என அழகப்பா டிரஸ்ட் தலைவர் வயிரவன் ராமநாதன் தெரிவித்தார். அழகப்பா டிரஸ்ட் தலைவர் வயிரவன் ராமநாதன் கூறுகையில், ‘‘வள்ளல் அழகப்ப செட்டியாரின் 110 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மழலையர் கல்வி முதல் தொழில்நுட்ப கல்வி வரை துவங்கி தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு மிகப்பெரிய தொண்டாற்றியுள்ளார். இவரின் தன்னலமற்ற கல்வி சேவை மூலம் இதுவரை 30 லட்சம் மாணவர்கள் படித்து முடித்துள்ளனர். தற்போது இக்கல்வி நிறுவனங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பொதுமக்கள், கல்வி நிறுவனங்களில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரையும் இணைத்து அழகப்பர் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வரும் 6ம் தேதி காலை 10 மணி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மாலை 6 மணிக்கு தமிழ் இசை சங்கத்துடன் இணைந்து வரலாற்று சிறப்பு மிக்க சிலப்பதிகார காவியம் நடன நிகழ்ச்சியாக நடத்தப்பட உள்ளது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொள்ளவுள்ளனர். அழகப்பா கல்வி டிரஸ்ட் மூலம் பிசியோதெரப்பி கல்லூரி, நர்சிங் கல்லூரி விரைவில் துவங்கப்பட உள்ளது. அதன்பின் படிப்படியாக ஆயுர்வேதிக் கல்லூரி, மெடிக்கல் டெக்னாலஜி, மெடிக்கல் கல்லூரி துவங்கப்பட உள்ளது’’ என்றார்.