குமாரபாளையம், ஏப்.4: எக்ஸல் கல்வி குழுமங்களின் நிறுவனர் தினவிழாவில் 338 மாணவ, மாணவிகளுக்கு ₹2.11 கோடி கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது.குமாரபாளையம் எக்ஸல் கல்வி குழுமங்களில் நிறுவனர் தினவிழா நடந்தது. விழாவிற்கு துணைத்தலைவர் மதன்கார்த்திக் தலைமை வகித்தார். தொழில்நுட்பத்துறை இயக்குனர் செங்கோட்டையன் வரவேற்றார். டிவி பிரபலம் கோபிநாத், ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுனர் யோகானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில், எக்ஸல் கல்வி குழுமத்தில் படிக்கும் 338 மாணவ-மாணவிகளுக்கு ₹2.11 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பங்கேற்று, நிறுவனர் நடேசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும், பரிசுகளையும் வழங்கினர். பல்கலைக்கழக மானிய குழுவின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார அமைப்பு வழங்கிய ஏ’ தரச்சான்றிதழை நிறுவனர் பிறந்த நாள் பரிசாக, கல்லூரி முதல்வர்கள் வழங்கினர். நிறுவனர் பேராசிரியர் நடேசன் நன்றி கூறினார்.