×

திண்டுக்கல் தெரசா நகரில் தூங்கும் தூய்மை பாரத முழக்கம்

திண்டுக்கல், ஏப். 4: திண்டுக்கல் தெரசா நகரில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் தூய்மை பாரதம் மூலம் தினமும் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மாநகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள அன்னை தெரசா நகரிலே கழிவுநீர் மாதக்கணக்கில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதில் கொசுக்கள் பல்கி பெருகி இப்பகுதி மக்களின் இரவு தூக்கத்தை கெடுத்து வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் பிரச்னையை கூட தீர்க்க மறுக்கின்றனர். இந்த நிலையில் ஊரெல்லாம் தூய்மை பாரதம் என கோடிக்கணக்கான ரூபாயில் செலவழித்து விளம்பரம் தேடுகிறார்கள். கழிவுநீரில் பன்றிகளும், நாய்களும் படுத்து விட்டு தெருவில் உலா வருகின்றன. இதனால் பலவித தொற்றுநோய்கள் பரவிவருகின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : city ,Dindigul Teresa ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்