×

பழநி அருகே டயர் வெடித்ததில் கார் மரத்தில் மோதி பால் வியாபாரி பலி 5 பேர் படுகாயம்

பழநி, ஏப்.4: பழநி அருகே கணக்கன்பட்டியில் டயர் வெடித்ததில் கார் மரத்தில் மோதிய விபத்தில் பால் வியாபாரி பலியானார். 5 பேர் படுகாயமடைந்தனர். பழநி அருகே வயலூரைச் சேர்ந்தவர் சின்னப்பன் (45). பால் வியாபாரி. இவர் தனது உறவினர்களுடன் நேற்று திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, வீரப்பூரில் உள்ள பொன்னர்- சங்கர் கோயிலுக்கு சென்றார். நேற்று மாலை காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். காரை வயலூரை சேர்ந்த ரத்தினமூர்த்தி என்பவர் ஓட்டி வந்தார். திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கணக்கன்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது காரின் முன்புற டயர் வெடித்தது.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் சின்னப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் காரில் பயணம் செய்த வயலூரை சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர் ராமசாமி (45). செல்வராஜ் (48), ரத்தினமூர்த்தி (50), கனகராஜ் (50), தங்கவேல் (50) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பழநி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உயிரிழந்த சின்னப்பனுக்கு வனிதா (36) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : car crash ,Tali ,
× RELATED அரசு பள்ளியில் ஆண்டு விழா