கரூர், ஏப். 4: காவிரியில் கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் வாய்க்கால்களுக்கு தண்ணீர் வராததால் சாகுபடி செய்யாமல் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் இருந்து திருச்சி, கரூர், அரியலு£ர், தஞ்சை உள்ளிட்ட பாசன நிலங்களுக்கு 17 பாசன கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் காவிரியின் வலதுகரையில் பிரியும் புகழூர், வாங்கல், நெரூர், கிருஷ்ணராயபுரம், மற்றும் மாயனூர் தடுப்பணைக்கு முன் பிரியும் கட்டளைமேட்டுவாய்க்கால், தென்கரை வாய்க்கால், புதுஅய்யன், பெருமலை, சீரங்கம்நாட்டு வாய்க்கால், காவிரியின் வலது கரையில் ராமவாத்தலை, புதுவாத்தலை உள்ளிட்ட 17 கால்வாய்கள் மூலம் 2 லட்சம் ஏக்கரில் பாசனம் நடைபெறும், கடந்த ஆண்டில் காவிரியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் வாய்க்கால்களுக்கு தண்ணீர் வராததால் சாகுபடி நடைபெறவில்லை. திருச்சி, கரூர், தஞ்சை, அரியலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் வாய்க்காலின் கடைமடை பாசன பகுதிகளுக்கு உரிய அளவு நீர் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு 17 வாய்க்கால் பாசனத்தில் பெருமளவு நிலங்களில் சாகுபடி செய்யவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவிரி விவசாயிகள் கூறுகையில். 2013ம் ஆண்டில் இருந்து கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. விவசாயிகள் பெரும் சிரமத்தில் உள்ளனர். வருமானமின்றி அவதிப்படுகின்றனர். இந்த ஆண்டு காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தும் கடைமடை வரை நீர் போகவில்லை. கரூர் மாவட்டத்தை பொறுத்தளவில் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் நச்சலூர் ரெகுலேட்டரில் இருந்து 12கிமீ. 10 ஆயிரம் ஏக்கர் உள்ளது. இப்பகுதிக்கு பாசனநீர் கிடைக்கவில்லை. இதற்காக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு மட்டுமே வந்தது. அதிகாரி வந்து ஆய்வு செய்து தண்ணீர் கிடைக்க செய்வார் என எதிர்பார்த்தோம். இதன் அடிப்படையில் கடைமடைக்கு தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படவில்லை. ஒவ்வொரு பாசன வாய்க்காலுக்கும் கடைமடை வரை நீர் வந்தால் தான் அனைத்து ஏரியாவிலும் விவசாயம் செய்ய முடியும். கடைமடை வரை நீர் செல்வதை உறுதி செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டால் 80 லட்சம் மூட்டை நெல் உற்பத்தியாகும். விவசாயிகளுககு வருமானம் கிடைப்பதுடன் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். எனவே கடைமடை பகுதி முழுவதற்கும் தண்ணீர் செல்லும் வகையில் நீர்மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றனர்.