தொண்டி, ஏப். 3: தொண்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என தற்போது வாக்குகள் கேட்டுவரும் வேட்பாளர்களிடம் கோரிக்கை வீடுத்து வருகின்றனர். தொண்டி பகுதி மக்கள் ஒவ்வொரு எம்.பி தேர்தலிலும் வாக்குகள் சேகரிக்க வரும் வேட்பாளர்களிடம் தங்கள் பகுதி மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர். வேட்பாளர்களும் வாக்குறுதி அளித்து செல்வதோடு சரி மீண்டும் தேர்தல் சமயத்திலேயே அவர்களை காணமுடிகிறது. தற்போதும் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இலங்கை தலைமன்னாரிலிருந்து ராமேஸ்வரம் வரை பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வந்தது. அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கப்பல் போக்குவரத்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை செல்லும் ரயில் வழித்தடத்தை தொண்டி வழியாக இணைத்து ராமநாதபுரம், கீழக்கரை மார்க்கமாக செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். வைகை ஆற்றிலிருந்து ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் வழியாக வரும் தண்ணீரின் உபரி நீரை தொண்டி மணிமுத்தாறு வரை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இப்பகுதி மக்கள் விடுத்துள்ளனர்.