×

எடப்பாடி ஆட்சியால் தமிழகத்திற்கு தலைக்குனிவு காங்.,வேட்பாளர் மாணிக்கம்தாகூர் தாக்கு

திருமங்கலம், ஏப். 3: விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் உள்ள முகமதுஷாபுரம், ராஜாஜி தெரு, இரட்டைக்குழாய், சோமசுந்தரம் தெரு, விருதுநகர் ரோடு, தெற்குதெரு காந்தி சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கமிஷன், கரப்ஸன் ஆட்சியை நடத்துகிறார். பிரதமர் மோடிக்கு அடிபணிந்து எடப்பாடி ஆட்சியை நடத்தி வருகிறார். கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் கம்பீரமாக இருந்தது. தமிழக முதல்வர்களை பார்த்து, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை தந்தனர். ஆனால், தற்போதைய அதிமுக அரசு மோடி அரசின் கைப்பாவையாக திகழ்கிறது. தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி மலரவும், மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் ஊழலற்ற ஆட்சி அமையவும், காங்கிரஸ் கூட்டணிக்கு வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம். எனவே, நீங்கள் அளிக்கும் ஒரு வாக்கில் இரண்டு விக்கெட் விழும். காங்கிரஸ் ஆட்சி மத்தியில் அமைந்தால் கல்விகடன் ரத்து செய்யப்படும். வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படும்’ என்றார். பிரசாரத்தில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், முன்னாள் எம்எல்ஏ.கள் சாமிநாதன், லதாஅதியமான், காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன், முன்னாள் நகர செயலாளர் தர், திமுக நகர இளைஞரணி முத்துக்குமார், பொதுக்குழு சிவமுருகன், மதிமுக நகரசெயலாளர் அனிதாபால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamilnadu Kangkunai ,
× RELATED வாக்கு எண்ணிக்கை நாளில் டாஸ்மாக் மூடல்