கொடைக்கானல், ஏப். 3: கொடைக்கானல் மலைச்சாலையில் காட்டுத்தீ தடுப்பு குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொடைக்கானல் மலைப்பகுதியில் இந்தாண்டு காட்டுத்தீ அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. காரணம் கடும் வெயில், காற்றில் வேகம் அதிகமாக இருப்பதே ஆகும். மேலும் பட்டா காடுகளில் தீ வைப்பதாலும் காட்டுத்தீ பற்றி வருகிறது. இதை தடுக்க உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். இதன்படி நேற்று கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் வனத்துறை சார்பில் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள், வாகனஓட்டிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வனப்பகுதியில் தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை குறித்த நோட்டீஸ்கள், வாகனங்களுக்கு ஸ்டீக்கர்கள் வழங்கப்பட்டன. தவிர காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க தங்களின் பங்களிப்பு அவசியம் என்றும், வனத்துறையோடு துணை நிற்க வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. மேலும் காட்டுத்தீ பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்க கைபேசி எண் குறித்த விபரங்களையும் தெரிவித்தனர்.