கரூர், ஏப். 3: கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று விராலிமலை சட்டமன்ற தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர், விராலிமலை மேற்கு ஒன்றியம், அன்னவாசல் வடக்கு ஒன்றிய பகுதியில் குக்கிராமங்களில் கொளுத்தும் வெயிலில் சென்று வாக்கு சேகரித்தார். அவர் பேசுகையில். அதிமுக வேட்பாளருக்கு ஏற்கனவே இருமுறை வாக்களித்து விட்டீர்கள். அவர் தொகுதிக்கும் வருவதில்லை. எந்த நலத்திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இந்த முறை காங்கிரஸ் வேட்பாளரான எனக்கு வாக்களிக்க கேட்டு கொள்கிறேன். நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது அதிமுக பாஜக ஆட்சியில்தான்.இதனால் ஏழை கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவாகி விட்டது. ஆட்சியில் இருந்து கொண்டு மத்திய அரசை ஆதரிக்கிறார்கள். 50 எம்பிக்களை வைத்து கொண்டு நீட் தேர்வு கொண்டு வந்ததை தடுக்க முடியாமல் இருந்தனர்.
உள்ளூர் டிவி இணைப்பு ரூ.74 ஆக இருந்ததை ரூ.200க்கு கொண்டு வந்து விட்டனர். அம்மாவின் அரசு என கூறி கொள்கிறார்கள். அவர் இருந்தால் இப்படி நடந்திருக்குமா? காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவினால் இப்படி அறிவிக்க முடியுமா?. ஆட்சியில் இருந்து கொண்டு கோரிக்கை தான் அதிமுகவால் வைக்க முடியும். கிராமங்களில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. தோல்வி பயத்தில் பஞ்சாயத்து தேர்தலை நடத்தாமல் இருக்கின்றனர்.
இதனால் குடிநீர் பிரச்னை மேலும் பெரியதாகி கொண்டே போகிறது. மத்திய மாநில அரசுகளால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்றார். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.