×

கீழப்பாவூரில் வீதிவீதியாக ஓட்டுவேட்டை மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிமாற்றம்

பாவூர்சத்திரம், ஏப். 3:  கீழப்பாவூரில் வீதிவீதியாக ஓட்டுவேட்டை நடத்திய நெல்லை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியம், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிமாற்றம் ஏற்பட திமுகவுக்கு வாக்களியுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
 நெல்லை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியம் நேற்று காலை கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்மன் கோயில் மைதானத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய மார்க்கெட் வீதி, செங்குந்தர் முதலியார் வீதிகள், கீழப்பாவூர் வடக்கு பஸ்நிலையம், கருமடையூர், மூலக்கரையூர், கோட்டையூர், யூனியன் ரோடு, சிவகாமிபுரம், சாலைப்புதூர், அடைக்கலப்பட்டணம், அத்தியூத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் மதச்சார்புள்ள ஆட்சி தான் நடந்து வருகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேசம் என நாட்டு மக்களை இரு பிரிவுகளாக பிரிக்கும் வகையில் சதி நடந்து வருகிறது.

 இதற்கு ஒரே மாற்று மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ராகுல் தலைமையில் அமைவது தான்.  நமது தலைவர் மு.க. ஸ்டாலினும், ராகுல் தலைமையில்தான் மத்தியில் நல்லாட்சி அமையும் என்று கூறியுள்ளார். இதே போல் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’’ என்றார். பிரசாரத்தில் பூங்கோதை எம்எல்ஏ,  கீழப்பாவூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன் அறிவழகன், ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரன், காங்கிரஸ் சார்பில் செல்வம், ஆறுமுகபாண்டி, திமுக இளைஞரணி சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் வாக்குசேகரித்தனர். முன்னதாக வேட்பாளர் ஞானதிரவியம் கீழப்பாவூரில் உள்ள பெரியார், காமராஜர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags : roadway ,road ,state ,state change ,
× RELATED சுந்தராபுரம்-மதுக்கரை சாலை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து