பொன்னமராவதி, மார்ச் 29: பொன்னமராவதி ஒன்றியத்தில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் மற்றும் தேசிய அடைவுத் தேர்விற்குப் பிந்தைய செயல்பாடுகள் குறித்த பயிற்சி நடந்தது. வகுப்பறை செயல்பாடுகளை மாற்றி அமைத்து சிறந்த சிந்தனை ஆற்றலுடன் செயல்திறன் மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்கி, மேம்பட்ட கற்றலுக்கு வழிவகை செய்யும் கற்றல் விளைவுகள் மற்றும் தேசிய அடைவு ஆய்விற்கு பிந்தைய செயல்பாடுகள் சார்ந்த இரண்டு நாள் பயிற்சியானது பொன்னமராவதி வட்டார வளமையத்தில் இரண்டு கட்டங்களாக மூன்று மையங்களில் நடைபெற்று வருகிறது.புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ராஜாசந்திரன், பால்டேவிட் ரொசாரியோ, வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் 120 தொடக்க நிலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். கற்றல் விளைவுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கருத்தாளர்கள் விரிவாக எடுத்துரைத்தார்கள். மாதிரி வகுப்பிற்குப்பின், பயிற்சியாளர்கள் கொடுக்கப்பட்ட அடைவுகளை கற்பிக்க செயல்பாடுகளை எழுதி அதை அனைவருடனும் பகிர்ந்துகொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரெகுநாததுரை அனைத்து மையங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இனிவரும் காலங்களில் வகுப்பறை செயல்பாடுகளில் கற்றல் விளைவுகள் தலைப்பே முக்கியத்துவம் பெற இருக்கிறது என்பது குறித்து எடுத்துரைத்தார். இதில் முதுநிலை விரிவுரையாளர் மாரியப்பன், ஆசிரியர் பயிற்றுநர்கள் பச்சமுத்து, சரவணன், அழகுராஜா, சக்திவேல், புவனேஸ்வரி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும், வட்டார வளமையமும் இணைந்து செய்திருந்தனர்.