குலசேகரம், மார்ச் 29: குலசேகரத்தை அடுத்துள்ள சூரியகோடு பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவர் களியல் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்கு செல்ல சூரியகோடு பகுதியில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கொல்லாறை பகுதியில் வைத்து பைக்கில் வந்த 2 மர்மநபர்கள் மாணவியின் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் செயினை பிடித்து இழுத்தனர்.
அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டவாறு செயினை பிடித்திருந்தவரின் கையை தட்டிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் தங்கள் கையில் வைத்திருந்த பிளேடால் மாணவியின் கையை கிழித்தனர். இதில் மாணவியின் கையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. பின்னர் மர்மநபர்கள் பைக்கில் தப்பி சென்று விட்டனர். இதற்கிடையே ரத்த காயங்களுடன் மாணவி ரோட்டில் மயங்கி விழுந்தார். உடனே அந்த பகுதியினர் மாணவியை மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.