திருமயம், மார்ச் 28: திருமயத்தில் தகர கொட்டகை அருகே சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருவதால் சுகாதார சீர்கேடு அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் அதிகளில் சுற்றுலா தளங்கள் உள்ளது. இதனால் திருமயம் பகுதிக்கு தினம்ேதாறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வடமாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் திருமயம் வழியாக தான் செல்ல வேண்டும். திருமயம் பகுதியில் பள்ளிகள், தாலுகா, ஒன்றிய அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளது. இதனால் திருமயத்துக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் தினம்தோறும் வந்து செல்கின்றனர். ஆனால் திருமயம் பகுதியில் உள்ள வீதிகளில் குப்பை கழிவுகள், கழிவுநீர் வெளியேற்றம் சரிவர நடைபெறுவது இல்லை.இந்நிலையில் திருமயம் தகர கொட்டகை எதிர்புறம் தனியார் வங்கி ஏடிஎம் அருகே சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதை சரி செய்ய அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. சாலையில் கழிவுநீர் வெளியேறி வருவதால் ஏற்படும் துர்நாற்றத்தால் அப்பகுதியில் உள்ள வணிகர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தொற்றுநோய் பரவம் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே திருமயம் முக்கிய பகுதியில் சாலையோரம் சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.