×

100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

புதுக்கோட்டை, மார்ச் 28: நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் மாரத்தான் போட்டி நடந்தது.
போட்டியை துவக்கி வைத்து கலெக்டர்  உமா மகேஸ்வரி பேசியதாவது: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலை சிறப்பாக நடத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  குறிப்பாக தேர்தல் ஆணைய அறிவுரையின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீத வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி பல்வேறு  விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது 77.37 சதவீதம், 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 76.45 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது. இந்திய தேர்தல் ஆணைய அறிவுரை மற்றும் ஆலோசனையின்படி வாக்காளர்கள் அனைவரும் விடுபடாமல் வாக்களிப்பதை வலியுறுத்தி அனைத்து தாலுகாக்களிலும் ஊர்வலங்கள், இருசக்கர வாகன ஊர்வலங்கள், மனித சங்கிலி, துண்டு பிரசுரங்கள், பேனர்கள், போஸ்டர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 18 முதல் 21 வயது வரையிலான வாக்காளர்களின் வாக்குப்பதிவை அதிகரிக்கும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, விளையாட்டு போட்டி, கோல போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. வாரச்சந்தை, தினசரி சந்தை, வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து வங்கி ஏடிஎம் மையங்களிலும் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது குறைவான வாக்குப்பதிவு நடந்த பகுதிகளை கண்டறிந்து அஞ்சல் அட்டை மூலமாக அஞ்சல் துறையினரை கொண்டு  வீடுவீடாக வழங்கியும், துண்டு பிரசுரங்கள், பேனர்கள் மற்றும் சுவரொட்டி விளம்பரங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுகிறது. இதுதவிர புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்து நேரடி செயல்விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.  
புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்திலிருந்து துவங்கிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டி பழைய பேருந்து நிலையம், கீழராஜாவீதி, பிருந்தாவனம், பால்பண்ணை, அரசு மகளிர் கலைக்கல்லூரி, புதிய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் பொது அலுவலக வளாகத்தை வந்தடைந்தது.
இந்த மாரத்தான் போட்டியில் 800க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். எஸ்பி செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : voting ,
× RELATED கேரளாவில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு...