காரைக்கால், மார்ச் 28: காரைக்கால் திருநள்ளாறு பேட்டை கிராமத்தில், அரசு பொறியியல் கல்லூரி சார்பில் துப்புரவு முகாம் நடைபெற்றது.காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின், என்.எஸ்.எஸ் சார்பில், சிறப்பு துப்புரவு முகாம், திருநள்ளாறு பகுதி பேட்டை கிராமத்தில் நடைபெற்றது. முகாமை, கல்லூரி முதல்வர் தம்பிதுரை தொடங்கி வைத்தார். கல்லூரி என்.எஸ்.எஸ் திட்ட அதிகாரி ஸ்ரீதரன் முகாமின் நோக்கம் குறித்து கிராம மக்களிடையே பேசினார். மாவட்ட என்.எஸ்.எஸ் திட்ட அதிகாரி லட்சுமணபதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆரோக்கியம், பொது சுகாதாரம், துப்புரவு, கிராம மேம்பாடு, தனி மனித தூய்மை குறித்து அவர் பேசினார். முகாமில், கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்கள் சுமார் 80 பேர் பேட்டை கிராமத்தின் தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றியதோடு, தூய்மையின் அவசியத்தை கிராமத்தினருக்கு விளக்கிக் கூறினர். திட்ட அதிகாரியும், உதவிப் பேராசிரியருமான ஞானமுருகன் நன்றி கூறினார்.