கரூர், மார்ச் 28: வேட்பு மனு தாக்கல் பரிசீலனை நடைபெறும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே வேட்பாளர்கள் சார்பில் வரும் கட்சி பிரமுகர்களிடம் போலீசார் கெடுபிடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மார்ச் 19ம்தேதியில் இருந்து 26ம்தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. வேட்பாளர்களின் சார்பில் குறிப்பிட்ட அளவு நபர்கள், அதற்கான ஒப்புதல் சான்றுகளுடன் உள்ளே அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று காலை 10 மணிக்கு மேல், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே டிஎஸ்பி கும்மராஜா தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வேட்பாளர்களின் சார்பில் உள்ளே வந்த ஒரு சில வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தவிர மற்ற அனைவரிடமும், போலீசார், வேட்பாளர் சான்று போன்றவற்றை கேட்டு கெடுபிடி காட்டினர். மேலும், காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் சார்பில் உள்ளே வந்த திமுக பிரமுகர்களிடமும் போலீசார் கெடுபிடியை தீவிரம் காட்டியதால் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பானது.