ஆம்பூர்: ஆம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் நேற்று மாலை வரை அதிகாரிகள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தமாதம் (ஏப்ரல்) 18ம் தேதி மக்களவை தொகுதி தேர்தலுடன் ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் ஆம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது, அந்தந்த வேட்பாளர்களின் சொத்து விவர பட்டியலும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்பிக்கப்பட்டது. இந்த சொத்து விவர பட்டியலில் பணம் கையிருப்பு, வேட்பாளர் பெயரில் உள்ள சொத்துக்கள், அவரது கடன் மற்றும் அவர் மீதான வழக்கு ஏதாவது இருப்பின் அதன் விவரம் ஆகியவை பூர்த்தி செய்யப்பட்டு வேட்பாளரால் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த தகவல் வேட்பு மனு தாக்கல் செய்த அன்றே தேர்தல் நடத்தும் அலுவலரின் கையொப்பத்துடன் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட வேண்டும். ஆனால், வேட்பு மனு தாக்கல் முடிந்து பரிசீலனையும் செய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை வேட்பாளர் சொத்து விவரம் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.