பெரியகுளம், மார்ச் 27: பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அமமுக சார்பில் டாக்டர் கதிர்காமு பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜெயப்பிரித்தாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுதாக்கல் செய்துள்ளேன். இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்வேன். மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் கிடைப்பதற்கு பாடுபடுவேன். பெரியகுளம் பகுதியில் தொழிற்சாலைகள் அமைப்பதற்கும், மாம்பழங்களை பதப்படுத்தும் தொழிற்சாலைகளையும் ஏற்படுத்துவேன். குடும்ப அரசியலை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ். தற்போது அதிமுகவில் வேறு யாரும் தகுதியான உறுப்பினர்கள் இல்லாததபோல் தனது மகனுக்கு சீட் கொடுத்துள்ளார். ஓபிஎஸ் மகன் பாராளுமன்ற தேர்தலில் நிற்பதால் ஓ.பன்னீர்செல்வம் தான் குடும்ப அரசியல் நடத்துகிறார். இவ்வாறு கூறினார். வேட்புமனு தாக்கலின்போது, அமமுக பெரியகுளம் நகர செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் கணேசன், அம்மா பேரவை செயலாளர் முத்தையா உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.