தக்கலை, மார்ச் 27 : குளச்சல் தொகுதி பறக்கும்படை தாசில்தார் இக்னேசியஸ் சேவியர் தலைமையில் அதிகாரிகள் முளகுமூடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் வேன் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் அதிகாரிகள் அந்த வேனை துரத்தி சென்றனர். கூட்டமாவு பகுதியில் சென்றபோது சாலையோர ஓடையில் வேன் மோதி நின்றது. இதையடுத்து வேனில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். தொடர்ந்து அதிகாரிகள் வேனை சோதனையிட்டனர். அப்போது வேனில் 35 லிட்டர் கொள்ளளவு உள்ள 31 கேன்களில் 1085 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது. இதை மானிய விலையில் வாங்கி கேரளாவுக்கு கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து மண்ணெண்ணெய் கேன்கள் மற்றும் வேனை தக்கலை தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் மண்ணெண்ணெயை இனயத்தில் உள்ள கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.