×

லால்குடி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ரூ.10லட்சம் பறித்த 5 பேர் கைது

லால்குடி, மார்ச் 26:  லால்குடி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ரூ.10லட்சம் பணம் பறித்த வழக்கில் கல்லக்குடி போலீசார் நேற்று 5 பேரை கைது செய்தனர்.திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (56). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன் புள்ளம்பாடியிலிருந்து கல்லக்குடிக்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது 10லட்சம் பணத்தை பையில் எடுத்துச் சென்றுள்ளார். புள்ளம்பாடி- கல்லக்குடி இடையே காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென 2 மொபட்டுகளில் வந்த ஆறு மர்ம நபர்கள் பாக்கியராஜின் வண்டியை வழிமறித்து அவரை கடத்தி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவரிடமிருந்து ரூ.10லட்சத்தை பறித்துக்கொண்டு, இதுபற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவோம் என்று கொலைமிரட்டல் விடுத்த அவரை அங்கிருந்து துரத்தி விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பாக்கியராஜ் உயிருக்குப்பயந்து ரூ.10 லட்சம் பறிபோன சம்பவத்தை தனது குடும்பத்தினரிடமும், வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. இந்த நிலையில் நேற்று கல்லக்குடி காவல்நிலையத்திற்கு ஒரு ரகசிய போன் வந்தது. அதில் பேசிய நபர், சில தினங்களுக்கு முன் புள்ளம்பாடி-கல்லக்குடி இடையே மர்மநபர்கள் தொடர்ந்து பணம் பறிப்பு சம்பவம் நடப்பதாக கூறிவிட்டு போனை கட் செய்து விட்டார். இந்த ரகசிய தகவலின்பேரில் லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், கல்லக்குடி சப்இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்தில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக மொபட்டில் 2  மர்ம நபர்கள் வந்தனர். மொபட்டை மறித்த போலீசார் அதில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் கல்லக்குடி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று முறைப்படி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இருவரும் பல்வேறு பகுதிகளில் பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக புள்ளம்பாடி பகுதியில் பாக்கியராஜை மிரட்டி ரூ.10லட்சம் பணம் பறித்ததை ஒப்புக் கொண்டனர். அதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் புள்ளம்பாடியை சேர்ந்த பழனிவேல் மகன் தியேட்டர் ரவி (43), காணக்கிளியநல்லூரை சேர்ந்த மணி மகன்கள் சந்திரசேகர் (34), மோகன் (27), ஜெயங்கொண்டம் பகுதி ஓலையூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் போஸ்ட் பிரபு(34), கல்லக்குடி பகுதியை சேர்ந்த சின்னையன் மகன் சதீஷ்குமார் (24) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

Tags : persons ,real estate agent ,Lalgudi ,
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை