×

தனியார் பஸ், குடோனில் பதுக்கிய மதுபாட்டில்கள் அதிரடி பறிமுதல்

புதுச்சேரி,  மார்ச் 26: புதுவையில் தனியார் பஸ், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  மதுபாட்டில்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இருப்பினும் அதை  கடத்திய மர்ம ஆசாமிகளை பிடிக்க கலால்துறை தீவிரம் காட்டி வருகிறது.
 புதுச்சேரியில்  நாடாளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் இரவு- பகலாக தீவிர ரோந்துப்  பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் குருசுகுப்பம்  பகுதியில் உள்ள பாழடைந்த குடோனில் சந்தேகப்படும்படியாக சிலர் சுற்றித்  திரிவதாக முத்தியால்பேட்டை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிழக்கு  எஸ்பி மாறன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்  ரமேஷ் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது  அந்த பாழடைந்த குடோனில் 168 மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது  தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அதை மறைத்து  வைத்திருந்த நபர்கள் யார்? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர்.

 இதனிடையே நேற்று அதிகாலை உருளையன்பேட்டை போலீசார்  நெல்லித்தோப்பு சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு சென்ற தனியார் பஸ்சை சோதனையிட்டபோது  அதில் 6 பைகள் கேட்பாரற்ற நிலையில் அனாதையாக கிடந்தன. அதை போலீசார்  கைப்பற்றி சோதனையிட்டபோது அதில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 500 குவாட்டர்  மதுபாட்டில்கள் பதுக்கி கடத்தி செல்லப்பட்டது அம்பலமானது. இதையடுத்து  அவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்ற போலீசார், அதை பஸ்சில்  கடத்திய ஆசாமிகள் யார்? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 2  இடங்களிலும் கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்கள் கலால்துறையிடம்  ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடத்தல் ஆசாமிகளை பிடிக்க அங்கு  அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படை தீவிரம் காட்டி வருகிறது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...