×

வேளிமலை குமாரகோவிலில் முருகன்- வள்ளி திருக்கல்யாணம் பக்தர்கள் திரளாக பங்கேற்பு

தக்கலை, மார்ச் 26: வேளிமலை குமாரகோவில் திருக்கல்யாண விழா நேற்று நடைபெற்றது. வேளிமலை குமாரகோவிலில் முருகப்பெருமான், வள்ளி திருக்கல்யாண விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு திருக்கல்யாண விழா நேற்று முன் தினம் காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் திருவிளக்கு பூஜையும், இரவு முருகப் பெருமானுக்கும் வள்ளி நாயகிக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.  நேற்று (25ம் தேதி) 2ம் நாள் விழாவில் திருக்கல்யாணம் நடந்தது. இதற்காக காலையில் சுவாமி வள்ளிக்குகை அருகில் உள்ள கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார். மதியம் சுவாமி வள்ளி நாயகியுடன் மலையில் இருந்து பூப்பல்லக்கில் எழுந்தருளும் போது குறவர் படுகளம் நடந்தது. குறவர் படுகளம் இறுதியின் போது முருகப்பெருமானிடம் குறவர்கள் சரணடைந்தனர். இந்நிகழ்ச்சியை பார்க்க திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.

 தொடர்ந்து  இரவு 7 முதல் 8மணிக்குள் முருகப் பெருமானுக்கும் வள்ளி நாயகிக்கும் திருக்கல்யாண முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக திருக்கல்யாணத்துக்குரிய தாலி, பட்டு உள்ளிட்ட சீர் பொருட்கள் நார் பெட்டியில் வைத்து தேர்வீதியில் ஊர் அழைப்பு செய்யப்பட்டது. இது முடிந்ததும்  சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டதுடன், மூலஸ்தானத்தில் முருகப்பெருமானுக்கும், வள்ளிதேவிக்கும் திருக்கல்யாணத்தை கோயில் மேல்சாந்தி மாங்கல்யத்தை மாற்றி நடத்தி வைத்தார். இதையடுத்து கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆறுமுக நயினாருக்கும், வள்ளி தேவிக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தை ஆகம விதிப்படி கோயில் போற்றிகள் நடத்தி வைத்தனர்.

திருமணம் முடிந்ததும் திருக்கல்யாணத்தில் பங்கேற்றவர்களுக்கு தேன், தினைமாவு, அமிர்தம், லட்டு, மாங்கல்யம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு சுவாமி வெள்ளிக்குதிரையிலும், அம்மன் பூப்பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளினர். விழாவின் போது கோயில் மேலாளர் மோகனகுமார், திருவிழா குழு  பேட்ரன் பிரசாத், தலைவர் மாதவன் பிள்ளை, செயலாளர் சுனில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.  விழா தொடர்ந்து 30ம் தேதி வரை நடக்கிறது. 30ம் தேதி 7ம் திருவிழாவன்று மாலை 5 மணிக்கு மயில், கிளி வாகனத்தில் சுவாமி, அம்பாள், ஆறாட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் போது தினமும் இரவு பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மெல்லிசை கச்சேரிகள் நடக்கிறது.

Tags : Devotees ,Murukan-Valli Thirukalaiyam ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...