×

முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் எரித்துக்கொலை

வாடிப்பட்டி, மார்ச் 22:  திண்டுக்கல்லில் மாயமான ஆட்டோ டிரைவரை வாடிப்பட்டி போலீசார் பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மகன் கார்த்திக்(36). ஆட்டோ டிரைவரான இவரை கடந்த 18ந் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மனைவி பிரேமா திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பாக திண்டுக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை தேடிவந்தனர்.     மேலும் கடந்த 2015ம் ஆண்டு என்.ஜி.ஓ காலணியை சேர்ந்த பந்தல் அமைப்பாளரான கொட்டகை கிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டாவது குற்றவாளியான கார்த்திக், ஜாமினில் வெளிவந்து வாய்தாவிற்காக சென்று விட்டு வந்தபோது மாயமானதால் அவரை பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் யாரேனும் கடத்தி சென்றுள்ளனரா என போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி பிரிவில் உடலில் தீக்காயங்களுடன் ஆண் பிணம் கிடப்பதாக வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், அது திண்டுக்கல்லில் மாயமான ஆட்டோ டிரைவர் கார்த்திக் என்பது தெரியவந்தது. பின்னர் கார்த்திக்கின் உடலை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பெரியகுளம் நீதிமன்றத்தில் கார்திக்கை கொலை செய்ததாக கூறி மனோஜ், பாண்டி, சேவியர், ஜெயபாண்டி உள்ளிட்ட 6 பேர் சரணடைந்துள்ளனர். தொடர்ந்து போலீசார் கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...