திருத்துறைப்பூண்டி, மார்ச் 22: திருத்துறைப்பூண்டி அருகே பாமணி ஊராட்சி தேசிங்குராஜபுரம் பகுதியிலுள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் பொது சுகாதாரத்துறையினர் குளோரின் அளவு சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தனர். திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர பகுதியிலுள்ள கிராமங்கள், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பல கிராமங்கள், மன்னார்குடி தாலுகாவில் ஒரு சில கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிசிச்சை பெற்று சென்றுள்ளனர். தற்போது திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் 11க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் திருத்துறைப்பூண்டி பகுதி முழுவதும் மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேல் மேற்பார்வையில் 14 மருத்துவ குழுக்கள் வீடு வீடாக சென்று தொற்று நோய் பாதிப்பு உள்ளதா என்று கண் காணித்து வருகின்றனர். இதில் மாவட்ட பொது சுகாதாரத்துறை இயக்குநர் தமிழரசன், சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பாமணி ஊராட்சி தேசிங்குராஜபுரம் பகுதியிலுள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தார். இது போன்று பல பகுதிகளிலும் ஆய்வு செய்து வருகின்றனர்.