தஞ்சை, மார்ச் 22: தேர்தல் நேரத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்வது குறத்து உடனடி அறிக்கை கொடுக்க வேண்டுமென கண்காணிப்பு குழுவினருக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. தேர்தல் செலவின பார்வையாளர்கள் மண்டுகுமார் தாஸ் மற்றும் பிரகாஷ் நாத்பன்வால் முன்னிலை வகித்தனர். கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பேசுகையில், உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் இதர மதிப்பு வாய்ந்த பொருட்களை பறக்கும்படை குழு மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவில் உள்ள தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் கண்டறிந்து கைப்பற்ற வேண்டும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமிருந்து விவரங்களை பெற்று தங்களின் பகுதியில் முறைகேடாக பணம் பரிமாற்றம் நடைபெறுவதை தடுக்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் தேர்தல் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து செல்ல வேண்டும். பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களின் இயக்கம் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. கைப்பற்றப்படும் ரொக்கம் மற்றும் இதர பொருட்கள் குறித்து உடனடி அறிக்கை கொடுக்க வேண்டும் என்றார். டிஆர்ஓ சக்திவேல், தஞ்சாவூர் ஆர்டிஓ சுரேஷ் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.