×

வேலூர் மக்களவை தொகுதிக்கு 2 சுயேட்சை வேட்பாளர்கள் மனுத்தாக்கல்

வேலூர், மார்ச் 22: 2 நாட்களாக வெறிச்சோடிய நிலையில் வேலூர் மக்களவை தொகுதிக்கு 2 சுயேட்சை வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேலூர் மக்களவை தொகுதிக்கான வேட்பு மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரிடமும், அரக்கோணம் மக்களவை தொகுதிக்கான வேட்பு மனுவை கலெக்டர் அலுவலகத்தில் டிஆர்ஓ பார்த்தீபனிடமும் தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த 2 நாட்களாக வேட்பாளர்கள் வராததால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில், வேலூர் தொகுதியில் போட்டியிட 26 பேரும், அரக்கோணம் தொகுதியில் போட்டியிட 27 பேரும் மனுக்களை பெற்றுச்சென்றனர்.

இந்நிலையில், 3ம் நாளான நேற்று மதியம் 12 மணியளவில் வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வன்(59), பாலாறு பாதுகாப்பு இயக்க உறுப்பினர் ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வெங்கடேசன்(47) ஆகிய 2 பேரும் வேலூர் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட, தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ராமனிடம் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால் அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிட 3வது நாளாக நேற்று யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் இன்று அதிமுகவினரும், வரும் 25ம் தேதி திமுகவினரும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags : Independents ,constituency ,Vellore Lok Sabha ,
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...