×

புதுகை அடப்பன்வயலில் 21 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை, மார்ச் 21: புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியில் கடந்த 21 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்தனர். அந்த பகுதியில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடைப்பை சரிசெய்து விடுவதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை உடைப்பை சரிசெய்யவில்லை. எனவே குடிநீர் வழங்காததை கண்டித்து அடப்பன்வயல் 3&ம் வீதியை சேர்ந்த ஆண்களும் பெண்களும் பால்பண்ணை ரவுண்டானாவில் காலி குடங்களுன் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பூர்விகா, நகராட்சி ஆணையர் பொறுப்பு ரவிச்சந்திரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக லாரி மூலம் குடிநீர் வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் பொது மக்கள் அதை ஏற்காமல் உடைந்த குடிநீர் குழாயை சரி செய்து குழாய் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். பின் குழாயை சரிசெய்வதாக தெரிவித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...