ஆவடி, மார்ச் 21: ஆவடி போலீஸ் சரகம் சார்பில் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பது தொடர்பாக துணை ராணுவம் மற்றும் போலீசார் கலந்துகொண்டு கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை நேற்று மாலை நடத்தினர். இதற்கு, அம்பத்தூர் காவல் மாவட்ட போலீஸ் துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமை தாங்கி கொடி அணிவகுப்பை தொடங்கி வைத்தார். இது ஆவடி பஸ் நிலையததில் இருந்து தொடங்கி சி.டி.எச் சாலை, புதிய ராணுவ சாலை வழியாக ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் வந்தடைந்தது. இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் 8 இன்ஸ்பெக்டர்கள், 22 சப்- இன்ஸ்பெக்டர்கள், 47 காவலர்கள், 38 துணை ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், அம்பத்தூர் போலீஸ் சரகம் சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் அம்பத்தூர் பஸ் நிலையத்தில் தொடங்கி வடக்கு புதூர் மெயின் ரோடு, அம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலை வழியாக ராம் நகர் பஸ் நிறுத்தம் வந்தடைந்தது. இதில், 4 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், 56 காவலர்கள், 30 துணை ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.