ஈரோடு, மார்ச் 20: விவசாயிகளின் பாசன உரிமைகளை மீட்டெடுக்க ஜூலை 23 ந் தேதி ஈரோட்டில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு மாநாடு நடக்கிறது.
கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் நல்லசாமி இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது: கீழ்பவானி பாசனம் பகுதிகளான ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 3 மாவடங்களில் 4 மக்களவை தொகுதிகள் உள்ளது. பாசன பரப்பளவு 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர்.தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 1958ம்ஆண்டில் இருந்து இதுவரை நீர் நிர்வாகம் என்பது அரசு ஆணைகளின்படியும், விதிமுறைகளின்படியும், காவிரி தீர்ப்பின்படியும் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக கீழ்பவானி பாசனம் பகுதிகளில் 16 போகம் கடலை சாகுபடியும், 8 போகம் நெல் சாகுபடியும் இழந்துள்ளது.
இதை பற்றி அரசும், அரசியல்கட்சிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்ளவில்லை. நீர் நிர்வாக தவறு 1993ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால் எந்த பலனும் இல்லை. இழந்து விட்ட பாசன உரிமைகளை மீட்கும் விதமாகவும், இனிமேல் நீர் நிர்வாகத்தில் தவறுகள் நடக்காமல் இருக்கவும், வரும் ஜூலை 23ம்தேதி ஈரோடு பரிமளம் மகால் மற்றும் குருசாமிகவுண்டர் திருமண மண்டபங்களை இணைத்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு மாநாடு நடைபெறும்.
இந்த மாநாட்டில் காவிரி தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகள் உள்ளடக்கிய கீழ்பவானி பாசன வரலாற்று புத்தகம் 30 ஆயிரம் பிரதிகள் பாசன விவசாயிகளுக்கு வழங்கப்படும். பாசன பகுதி விவசாயிகளை மாநாட்டிற்கு அழைக்கும் வகையில் பாசன பகுதிகளில் ஊர்க்கூட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.