ஊத்தங்கரை, மார்ச் 20: ஊத்தங்கரை காசிவிஸ்வாநர் கோயிலில் பங்குனி உத்திர விழா நடைபெறுகிறது. நாளை (21ம் தேதி) அதிகாலை கங்கணம் கட்டும் நிகழ்ச்சியும், காலை 6 மணிக்கு பம்பை, சிலம்பாட்டத்துடன் காவடிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், வள்ளி தெய்வாணை சமேத முருகப்பெருமான் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு மேல் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாணியர் நல சங்கம் மற்றும் வாணியர் இளைஞர் நல சங்க நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.இதேபோல் ஊத்தங்கரை கல்லாவி மெயின் ரோடு சுப்ரமணிய சுவாமி கோயிலில் 41ம் ஆண்டு பங்குனி உத்திர விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நாளை (21ம் தேதி) காலை 5 மணிக்கு காவடி பூஜையும், தேர் வைபவமும், 12 மணிக்கு அன்னதானமும், 1 மணிக்கு கதிர்வேல் மார்பில் மஞ்சள் இடித்தலும், 6 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. விழாவில் 23ம் தேதி காலை 10.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை செங்குந்த மகாஜன சங்கம் மற்றும் செங்குந்தர் இளைஞர் சங்கம் சமுதாய பொருளாதார தொண்டு மன்ற நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.