காரைக்கால், மார்ச் 20: காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தை சுற்றி மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கடந்த ஆண்டு இலவச அரிசியை மீண்டும் வழங்கக்கோரி, மாவட்ட கலெக்டர் அலுவகலத்தை முற்றுகையிட்டு, அங்குள்ள நாற்காலிகளை உடைத்து எறிந்து கலாட்டா செய்ததால், மாவட்ட நிர்வாகம் கலெக்டர் அலுவலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு நீண்ட நாட்களுக்கு நீடித்து, அனைத்து கட்சி வலியுறுத்தலைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்தான் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மாவட்ட கலெக்டரும் நீதிபதியுமான விக்ராந்த்ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அலுவலகம், வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு அறைகள் இயங்குவதால், இவற்றின் பாதுகாப்பு கருதி, இன்று முதல் (19ம் தேதி) 3 மாதத்திற்கு கலெக்டர் அலுவகலத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு, அதாவது காமராஜர் சாலை, நேருவீதி, பாரதியார் வீதி, திருநள்ளாறு வீதி, மாதாகோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. எனவே, இப்பகுதிகளில் பொதுமக்கள் கும்பலாக கூடுவதோ, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தவோ கூடாது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.