×

இரும்பு கடைக்கு சென்ற தரமற்ற இலவச பொருட்கள்


ராமநாதபுரம், மார்ச் 19: ராமநாதபுரத்தில் தமிழக அரசின் இலவச பேன், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் ரிப்பேராகி சரி செய்ய முடியாத நிலையில் பழைய இரும்பு கடையில் கிடக்கின்றன. தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு இலவச பேன், மிக்சி, கிரைண்டர்களை வழங்கியது. இதில் ஏற்கனவே தங்கள் வீடுகளில் பேன், மிக்சி வைத்திருந்தாலும் அரசின் இலவசம் என்பதால் அனைவருமே இந்த இலவச பொருட்களை வாங்கி இருந்தனர். இந்நிலையில் அரசின் இலவச பொருட்கள் ஒரு மாதம் கூட உருப்படியாக இயங்கியது கிடையாது. சில பொருட்கள் வாங்கும்போது உடைந்தும், சுவிட்சுகள் வேலை செய்யாமலும் இருந்தது. இதை கடைக்கு கொண்டு சென்றால் மெக்கானிக்குகள் இதை சரி செய்யவதற்கு பதிலாக புதிய எலக்ட்ரானிக் பொருட்களே வாங்கி விடலாம் என்கின்றனர்.

இதனால் வேறு வழியில்லாமல் பொதுமக்கள் ரூ.50, 100க்கு பழைய இரும்பு கடையில் இந்த பொருட்களை விற்று வருகின்றனர். ராமநாதபுரம் அண்ணா நகர் பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் இயங்காத பேன்கள், மிக்சிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் வாகனம் மூலம் வந்து வீட்டில் ஓடாத அரசின் பொ ருட்கள் இருந்தால் எங்களிடம் தரலாம் என விளம்பரம் செய்தும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். அரசு இலவசமாக கொடுத்தாலும் மக்களின் வரிப்பணம் தான் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. இனி வரும் காலங்களில் கொடுக்கும் இலவச பொருட்களை தரமுள்ள பொருளாக கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பாரதி நகர் மணிகண்டன் கூறுகையில், ஏழை எளிய மக்களுக்கு அரசு இலவசமாக இந்த பொருட்களை வழங்கி உள்ளது.  தரமில்லாத பொருட்களை வழங்குவதால் இதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் இடத்தை அடைத்து வைக்காமல் கிடைக்கும் விலைக்கு விற்றுவிடுவோம் என்ற மனநிலைக்கு பொதுமக்கள் வந்து விட்டனர். எங்களை போன்ற கூலிவேலை செய்யும் பொதுமக்களின் நலன் கருதி வரும் காலங்களில் அரசு தரமுள்ள பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags : iron shop ,
× RELATED திருவில்லிபுத்தூரில் பழைய இரும்புக்...