பெரம்பூர்: தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரி செயல்பட்டு வரும் நிலையில், அடிப்படை வசதியான குடிநீர், கேன்டீன் உள்ளிட்ட வசதிகள் ெசய்து தரப்படவில்லை. இதுகுறித்து பல முறை மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் கல்லூரி முதல்வர் மாணவ மாணவிகளை கோரிக்கையை நிறைவேற்றவில்லை. மேலும் அவதூறாக பேசுவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று மாணவ மாணவிகள் மாதிரி தேர்வு எழுதாமல் கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து 500க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களை அடிக்க முற்பட்டபோது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெரும் அளவில் போராட்டம் நடத்துவோம் என்று கூறி கலைந்து சென்றனர்.