புதுச்சேரி, மார்ச் 15: புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஒன்றாக 15 ரவுடிகள் ஊரில் நுழைய தடை விதிக்க மாவட்ட கலெக்டரிடம் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 10ம்தேதி நாடாளுமன்ற மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியானதால் தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலை எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடத்த மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி புதுவை முழுவதும் பேனர், கட்டவுட்டுகள் போலீசார் உதவியுடன் அகற்றப்பட்டன. உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் 218 பேரிடம் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் கண்காணித்து வருகின்றனர். வாணரப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ரவுடிகளின் வீடுகள் போலீசாரால் அவ்வப்போது சோதனையிடப்பட்டு வருகிறது. வெடிகுண்டுகள், ஆயுதங்கள் எங்காவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே குற்ற பின்னணியில் உள்ள ரவுடிகளை ஊருக்குள் வராமல் அவர்களை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க போலீசார் மாவட்ட கலெக்டர் அருணுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
ரவுடிகளான உருளையன்பேட்டை அந்தோணி, ஒதியஞ்சாலை பாம் ரவி, வாணரப்பேட்டை சுதாகர், சூசைராஜ், முத்துவேல், மங்கலம், அன்பரசன், சக்திவேல், மன்னாதன், கொசப்பாளையம் மணிகண்டன் (எ) சிலம்பு, பாக்கியராஜ் (எ) பரசுராமன், ராஜசேகர் உள்ளிட்ட 15 பேர் மீது ஊருக்குள் நுழைய தடைவிதிக்க போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி சிஆர்பி சட்டப் பிரிவுகளின்கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஆயுதம் வைத்திருந்த வழக்கில் நேற்று முன்தினம் திருவள்ளுவர் சாலையை சேர்ந்த விஜய் என்ற தீபக், ராஜா நகர் சரவணன், முதலியார்பேட்டை தமிழ் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.