பண்ருட்டி, மார்ச் 15: பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் பெண்ணை ஆற்றில் இருந்து அரசு அனுமதியில்லாமல் மாட்டுவண்டியில் மணல் அள்ளப்படுவதாக புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் ஒறையூர் வழியாக வந்தபோது கரும்பூர் என்கிற இடத்தில் எதிரே வந்த மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்தனர். அப்போது வண்டி ஓட்டிய உரிமையாளர்கள் 9 பேர் தப்பி ஓடினர். இதன் காரணமாக 9மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் காடாம்புலியூர் அருகே பலாப்பட்டு கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் இருந்து அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த கானங்குப்பம் ராமானுஜம்(55), காசி விஸ்வநாதன்(44), கானஞ்சாவடி குமரவேல்(36), கொட்டி கோனங்குப்பம் புஷ்பநாதன்(44) ஆகிய 4 பேரையும் காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர். மேலும், மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.