நாகர்கோவில், மார்ச் 15: பல்வேறு துறை அலுவலர்களுக்கான மக்களவை தேர்தல் பயிற்சி வகுப்பை கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தொடங்கி வைத்தார். பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கையினை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறை அரசு அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆகியோர் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே, தலைமையில் தேர்தல் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள், 117 மண்டல குழுக்களை சார்ந்த அலுவலர்களுக்கும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் தேர்தல் நடத்தை விதிகள், வாக்கபதிவு இயந்திரம் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கபட்டு வருகிறதா? என்பது குறித்து 24 மணி நேரமும் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இக்கட்டுப்பாட்டு அறையினை 18005998010, 04652 -225564 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் தகவல் தொடர்பு மைய தொலைபேசி எண் 1950 -ஐ தொடர்பு கொண்டு, தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், குமரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் முன்னிலையில், உதவி செலவின கண்காணிப்பாளர், கணக்கியல் குழு, வீடியோ கண்காணிப்பு குழு, செலவின கண்காணிப்பு செல் குழுவினை சார்ந்த அலுவலர்களுக்கு தேர்தல் செலவினம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டது.