×

அகழ்வாராய்ச்சி நடக்க உள்ள சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதியில் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது

ஏரல், மார்ச் 15: அகழ்வாராய்ச்சி நடைபெற உள்ள சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதிகளில் மணல் மற்றும் கல்குவாரிகள் அமைக்க கலெக்டர்கள் அனுமதி வழங்கக்கூடாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிடக்கோரியும், ஏரல் அருகேயுள்ள சிவகளையில் பழங்கால பொருட்கள் கிடைத்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தக்கோரியும் முத்தாலங்குறிச்சி காமராஜ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனித்தனி மனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் பழனி உள்ளிட்ட பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடத்த உத்தரவிட கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், சிவகளை பகுதியில் அடுத்த ஆண்டு (2020) ஆராய்ச்சி மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 மேலும், திண்டுக்கல் அருகே பழமையான சின்னங்கள் இருந்தாலும் தற்போது அந்த பகுதி முழுவதும் குடியிருப்புகளும், விளை நிலங்களும் அதிகமாக உள்ளன எனவும் அவர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் சேட்டிலைட் மூலம் பூமியின் அடிப்பரப்பில் தொல்லியல் எச்சங்கள் உள்ளதா? என ஏன் கண்டறியக்கூடாது என கேள்வி எழுப்பியதோடு, அம்முறையில் கண்டறிந்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் தொல்லியல் சின்னங்களாக அறிவிக்கப்பட்டவை, அறிவிக்கப்பட உள்ளவை அகழ்வாராய்ச்சி நடைபெற உள்ள பகுதிகளில் மணல், கல் குவாரிகள் அமைக்க அந்தந்த மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கக்கூடாது எனவும், தொல்லியல் துறை சார்பில் இதுகுறித்து தகவல் பலகை வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

Tags : area ,Adichanallur ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...