×

க.பரமத்தி பகுதியில் மாட்டு சந்தை இல்லாததால் விவசாயிகள் கடும் அவதி




க.பரமத்தி, மார்ச் 15: க.பரமத்தி பகுதியில் வாரந்தோறும் நடக்கும் ஆட்டுச் சந்தையைப் போல மாட்டு சந்தையும் துவங்கப்படுமா என்ற ஏக்கத்தில் க.பரமத்தி விவசாயிகள் நீண்ட நாள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் 30 ஊராட்சிகளை கொண்ட ஒன்றியமாக க.பரமத்தி உள்ளது. இதில் அணைப்பாளையம், அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு, கூடலூர்மேற்கு, கார்வழி, காருடையம்பாளையம், கோடந்தூர், குப்பம், மொஞ்சனூர், முன்னூர், புஞ்சைகாளகுறிச்சி, நடந்தை, நெடுங்கூர், க.பரமத்தி, பவித்திரம், புஞ்சைகாளகுறிச்சி, புன்னம், ராஜபுரம், சூடாமணி, தென்னிலை கிழக்கு, தென்னிலை மேற்கு, தென்னிலை தெற்கு, தொக்குப்பட்டி, துக்காச்சி, தும்பிவாடி, விஸ்வநாதபுரி ஆகிய 30 ஊராட்சிகள் உள்ளன இந்த ஊராட்சிகளில் உள்ள கிராம ஊராட்சிகளில் வசிக்கும் விவசாயிகள் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பை பிரதானமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பையே நம்பியிருக்கின்றனர். இதில் வெள்ளாடு, செம்மறி ஆடு, எருமை, மாடு கால்நடைகளை அதிகமான விவசாயிகள் வளர்த்து அவ்வப்போது தேவையான நேரங்களில் கால்நடைகளை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக க.பரமத்தியில் செவ்வாய்கிழமையில் கூடும் ஆடுகளுக்காக நடத்தப்படும் சந்தையில் ஆடுகளை விற்று விவசாயிகள் பயன்பெறுவதும் சிலர் வாங்குவதற்கு பெரிதும் உதவியாக இருப்பதாக விவசாயிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.  இதே போல க.பரமத்தி சுற்று வட்டார பகுதி விவசாய மாடுகள் மற்றும் எருமை கறவை மாடுகள் வாங்க அல்லது விற்க வேண்டுமானால் 60 கி.மீ தூரமுள்ள ஈரோடு மாவட்ட சிவகிரி சந்தைக்கோ அல்லது சுமார் 45 கி.மீ. தூரமுள்ள கரூர் அடுத்துள்ள உப்பிடமங்கலம் வாரச்சந்தைக்கோ செல்ல வேண்டும் அவ்வாறு செல்லும் போது விவசாயிகள் அதிகாலையில் 2 மணிக்கோ எழுந்து சென்றால் மட்டுமே மாடு, எருமைகளை வாங்க முடியும். விடிந்து சென்றால் கிடைப்பது அரிதாக உள்ளது என்கின்றனர். அவ்வாறு வாங்கும் மாடுகள் மற்றும் எருமைகளை கால் நடையாக அவற்றை கொண்டு வர முடியாமல் லோடு ஆட்டோ அல்லது டெம்போ போன்ற வாகனங்கள் மூலமே கொண்டு வர முடியும். இதற்கு வாகன டிரைவர்கள் வாடகையை இரு மடங்கு விவசாயிகளிடத்தில் வசூலித்து விடுவதாக விவசாயிகள் குறை கூறுகின்றனர். எனவே விவசாயிகளின் நீண்ட நாள் கனவாக உள்ள மாடு, எருமை போன்றவைகளையும்  க.பரமத்தியில் நடைபெறும் சந்தையில் இணைத்து தொடங்க சம்பந்தப்பட்ட மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென க.பரமத்தி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags : farm ,area ,
× RELATED கேரளாவில் வேகமாக பரவி வரும்...