×

ஓய்வு போலீஸ்காரர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை

மன்னார்குடி, மார்ச்14: மன்னார்குடி அடுத்த வடுவூரில் பூட்டிக் கிடந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 15 பவுன்நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகே வடுவூர் மெயின் ரோட்டில் வசிப்பவர் ஜெயபாலன் (63). ஒய்வு பெற்ற போலீஸ்காரர். இவரின் மனைவி ஜெயப்பிரியா (53). மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெயபாலன் மாமனார் வடுவூர் அருகில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் வசித்து வருகிறார்.அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் மாமனாரை பார்ப்பதற்கு ஜெயபாலனும், ஜெயப் பிரியாவும் வீட்டை பூட்டி விட்டு 5 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை கிராமத்திற்கு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டிற்கு வந்த ஜெயபாலனும் அவரது மனைவி ஜெயப்பிரியாவும் வீட்டை திறந்து உள்ளே சென்ற போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.மேலும் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டம் விட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த சுமார் 15 பவுன் நகைகள் மற்றும் ரூ 10 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது.இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடுவூர் இன்ஸ்பெக்டர் பசுபதி, எஸ்ஐ தங்க மாதவன் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை  நடத்தினர்.  மேலும் திருவாருரில் இருந்து கை ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். தொடர்ந்து ஸ்டெபி போலீஸ் நாய் வரவழைக்கப் பட்டு சோதனை நடத்தப் பட்டது.பின்னர் இதுக் குறித்து  ஜெயபால் வடுவூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். ஒய்வு பெற்ற போலீஸ்காரர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் வடுவூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : residence policeman home ,
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து